வாஷிங்டன்: ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சார பணிகளில் அதிபர் ட்ரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் கலந்து கொள்ளும் 2-ஆவது விவாத நிகழ்ச்சி வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆனால், அதிபர் டிரம்ப் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பி உள்ளதால், இந்த விவாத நிகழ்ச்சியை ஆன்லைன் வாயிலாக நடத்த விவாத நிகழ்ச்சியை நடத்தும் கமிட்டி பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், வருகிற 15-ஆம் தேதி விவாத நிகழ்ச்சி ஆன்லைனில் நடந்தால், அதில் பங்கேற்க மாட்டேன் என்றும், ஆன்லைன் விவாதத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.